ஆனி மாத கார்த்திகை உற்சவம்(01) – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 16-06-2023 வெள்ளிக்கிழமை ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து நண்பகல் கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி கார்த்திகை உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உபயம் – குணசீலராசா குருகுலசிங்கம் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்