கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் எதிர்வரும் 05-11-2021ம்  திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் கந்தஷஷ்டி விரத உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக முற்பகல் 10.00 மணியளவில் கும்ப வைப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட அபிஷேகம், விசேட பூஜாராதனைகள் நடைபெற்று கந்தபுராணப் (சூரபன்மன் வதைப்படலம்) படிப்பு நடைபெறும்.

கந்தஷஷ்டி விரத உற்சவ நாட்களில் பகல் பூஜாராதனைகள் நிறைவடைந்த பின்னர் சர்க்கரைத் தண்ணீர், ஆலய திருமடத்தில் அன்னதானம் என்பன நடைபெறும் என்பதையும் விரதம் அனுஷ்டிக்கும் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் விஷேட பூஜாராதனைகள் இடம்பெற்று, மங்கல வாத்தியங்களுடன் வள்ளி தேவசேனா சமேத முருகையா அலங்கார ரூபமாய் எழுந்தருளி உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து கந்தபுராணப் படிப்பு நடைபெற்று உற்சவம் நிறைவு பெறும்.

இவ்வாறாக தொடர்ந்து ஐந்து நாட்களும் உற்சவ நிகழ்வு நடைபெற்று கந்தஷஷ்டி விரத ஆறாம் (இறுதி) நாளான 10-11-2021 புதன்கிழமை மாலை சூரசம்மார  நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

சூரசம்மார நிகழ்வைத் தொடர்ந்து ஆலயத்தில் பிராயச்சித்த அபிஷேகம், பூஜை, கும்பச் சரிப்பு நிகழ்வு என்பன நடைபெற்று அன்றைய நிகழ்வு நிறைவு பெறும்.

அன்றிரவு பாரணைப் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று மறுநாள் 11-11-2021 வியாழக்கிழமை காலை 6-30 மணியளவில் பாரணை பூஜை நடைபெறும்.

தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவம்
11-11-2021 வியாழக்கிழமை பாரணைப் பூஜை முடிவடைந்த பின்னர் முற்பகல் 10.00 மணியளவில் தெய்வயானையம்மன் திருக்கல்யாண உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான கந்தபுராணப் படிப்பு நடைபெறும்.

அன்றைய தினம் மாலை விசேட அபிஷேகம் நடைபெற்று விஷேட பூஜாராதனையுடன் தெய்வானையம்மன் திருக்கல்யாண விழா வெகு கோலாகலமாக நடைபெற்று தொடர்ந்து எம்பெருமான் வெளிவீதி உலா வந்தருளுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரதோற்சவ ஐந்தாம் நாளன்று(09-11-2021) செவ்வாய்க்கிழமை மாலை சூரபன்மன் திக்கு விஜயம் நிகழ்வு இடம்பெறும்

கந்தஷஷ்டி விரதோற்சவ நாட்களில் அனைத்து அடியார்களும் ஆலயத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து அங்கு நடைபெறும் அனைத்து விஷேட உற்சவ நிகழ்வுகளிலும் கலந்து எம்பெருமானின் பேரருளைப் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய அறிவிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தஷஷ்டி விரத உற்சவ நாட்களில் சுவாமி உள்வீதி உலா வருதல், சூரன் திக்கு விஜயம், சூரன் ஆட்டுதல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் இளம் அடியார்கள் அனைவரும் பங்கேற்று உற்சவத்தை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

கந்தஷஷ்டி விரத உற்சவ உபயகாரர்கள் விபரம்

05-11-2021 – வெள்ளி – 1ம் நாள் – திரு. ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

06-11-2021 – சனி – 2ம் நாள் – திரு. சி.ஈசுரபாதம் குடும்பத்தினர்- நாகர்கோவில் தெற்கு – திரு. வ.யோகேஸ்வரன் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

07-11-2021 – ஞாயிறு – 3ம் நாள் – திரு. வே.சிதம்பரநாதன் குடும்பத்தினர் – நாகர்கோவில் தெற்கு

08-11-2021 – திங்கள் – 4ம் நாள் – திரு. ந.சபாரத்தினம் குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

09-11-2021 – செவ்வாய் – 5ம் நாள் – திரு. மா.சாம்பசிவம் குடும்பத்தினர்- நாகர்கோவில் கிழக்கு

10-11-2021 – புதன் – 6ம் நாள் – சூரன் போர் – பாரணை பூஜை – பொது

11-11-2021 – வியாழன் – தெய்வானையம்மன் திருக்கல்யாண உற்சவம் – திரு.மு.உதயகுமார் (நாள்சீட்டு) குழுவினர் நாகர்கோவில் கிழக்கு

முருகையா அடியார்களே!
சூரசம்மார உற்சவ நிகழ்வும், மறுநாள் நடைபெறவுள்ள பாரணைப் பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு ஆகியன பொதுப் பூஜையாக நடைபெறவுள்ளதால் எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்கி ஒத்துழைப்பதுடன், பாரணைப் பூஜைக்குரிய அன்னதானப் பொருட்களையும் கொடுத்துதவுமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.

முக்கிய குறிப்பு
அனைத்து அடியார்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நிர்வாக சபையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு